Thursday, August 03, 2006

சௌராஷ்ட்ரா திருக்குறள்

சௌராஷ்ட்ரா திருக்குறள் பதித்து வருவதை பலரும் அறிவர், 1330 திருக்குறளும் தமிழில் உள்ளது போன்றே ஏழு சீர், நேர் நிறை, தேமா, புளிமா, கூவிளம், கருவிளம், நாள், மலர், காசு, பிறப்பு போன்ற விதிகளின் படி அமரர் ஸ்ரீ S.S.R ராம் அவர்கள் வடித்துள்ளார். அதே அர்த்தம் பெறும் ஒரு குறளை சௌராஷ்ட்ரா மொழியில் மொழிபெயர்த்த ஸ்ரீ ராம் அவர்கள் அமரத்துவம் பெற்றாலும் இன்றும் தமது செயற்கறிய செயல்களால் வாழ்கிறார்.

அப்பேற்பட்ட ஒரு மிக பெரிய ஒரு களஞ்சியத்தை கடந்த 2000ம் ஆண்டு ஸ்ரேஷ்ட ஸௌராஷ்ட்ர ஸாஹித்ய சபா தமது பொன்விழா, மற்றும் சௌராஷ்ட்ரா மாத இதழ் “பாஷாபிமானி”, யின் வெள்ளி விழா கொண்டாடத்தில் இந்த சௌராஷ்ட்ரா திருக்குறளை குறுந்தகட்டில் பதித்து “டிக் ஸாஃப்ட்” என்ற மென்பொருள் நிறுவனம் வெளியிட்டது. அப்போது ஒவ்வொரு குறளுக்கான இணையான பிற நான்கு மொழிகளில் (தமிழ், சௌராஷ்ட்ரா, ஆங்கிலம், ஹிந்தி) திருக்குறளையும் அதன் பதவுரையுடனும் தமது மென்பொருளில் இணைத்து வெளியிட்டது. சேது பந்தனத்தில் அணிலை போல் அப்போது எல்லா சௌராஷ்ட்ர திருக்குறளை அப்போதைய சௌராஷ்ட்ரா எழுத்துருவான “குபேர்” ஃபாண்டில் தட்டி தரும் பெரும் பேறு எனக்கு கிட்டியது. அப்போது தான் முதல் முதலில் சௌராஷ்ட்ரத்தில் ஒரு திருக்குறள் இருப்பதை அறிந்தேன், பின் புத்தகத்தை பெற்று மேலும் படிக்கலானேன், அப்படியே திருவள்ளவரே நம் சமுகத்தில் தோன்றி நம் தாய் மொழியில் இயற்றினாரோ என்று எண்ணும் அளவுக்கு சிறப்பாக இயற்றியிருப்பதை கண்டு நம்பமுடியவில்லை.

இப்புத்தகத்தை “பூஜ்யஸ்ரீ சித்த நரஹரி” அவர்கள் தமது “சித்தாஸ்ரமம்” வாயிலாக 1993ல் அப்போதைய நிதியமைச்சர் டாக்டர். இரா. நெடுஞ்சழியன் மற்றும் பல அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிட்டது.
இக்குறள்களின் பதவுரை தமிழிலும், கருத்துரை சௌராஷ்ட்ரத்திலும் வித்வான் கே ராமநாதன் அவர்கள் இயற்றியுள்ளார். இத்திருக்குறளுக்கு “ஸ்ரீத்வின்” என்று "பாஷாபிமானி" ஆசிரியர் திரு.T.V.குபேந்திரன் அவர்கள் சூட்டி மகிழ்ந்தார். பல மொழிஆர்வலர்களும், திருக்குறள் ஆர்வலர்களும் இந்நூலை ஆராய்ந்து புகழ்ந்துள்ளனர்.

இமயத்திற்க்கு பொன்னாடை போர்த்தும் ஒரு முயற்ச்சி அதுவும் சௌராஷ்ட்ரர்களின் கலைநயத்துடன் கொண்ட கைதறி பட்டு பொன்னாடை இந்த சௌராஷ்ட்ரா திருக்குறள். அதை கணினியில் வடிவமைத்து, அது பல மாநிலங்களில், பல நாடுகளில் ஊண்றிவிட்ட சௌராஷ்ட்ரர்கள் படிக்க உறுதுணையாக பல மொழிகளில் பதிக்கும் பல நாள் கனவு இதோ இப்போது நினைவாகி வருகிறது. எல்லா திருக்குறளையும் தமிழில் தட்டி விட்டேன், இனி பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்து பதிக்க வேண்டியது தான். நாளொன்றுக்கு ஒரு அதிகாரம் என்று வைத்தாலும் 133 நாட்களில் முடியுமா? என்ற ஒரு சிறிய கேள்வியும் இருந்து கொண்டிருந்தது. ஆனால அவ்வனைத்து ஐயங்களும் தகரும் வண்ணம் இப்போது அன்னை அங்கயர்கன்னியின் அருளால் தமிழில் தட்டியதை சௌராஷ்ட்ரா – மற்றும் ஹிந்தில் இரண்டே நிமிடத்தில் ஒரு அதிகாரம் மாற்றும்படியாக ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளேன். பின் அவ்வாறு மாறியதை 'பராஹா மென்பொருள்' இன்ன பிற மொழிகளில் ஒவ்வொன்றாக மாற்றி தரும். பிறகு அதை பிளாகரில் பதிக்க வேண்டியது தான்.

5 comments:

சிவமுருகன் said...

நன்றி caco.

வரவனையான் said...

நல்ல முயற்சி. ஆவனப்படுத்துங்கள். காலம் உங்களை வாழ்த்தும்

G.Ragavan said...

திருக்குறள் சௌராஷ்டிர மொழியில் தமிழ் இலக்கண முறையில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல செயல். அதற்கு நீங்களும் உதவியிருக்கின்றீர்கள் என்றால் பெருமகிழ்ச்சி.

சிவமுருகன் said...

//நல்ல முயற்சி. ஆவனப்படுத்துங்கள். காலம் உங்களை வாழ்த்தும் //

நன்றி செந்தில்.

சிவமுருகன் said...

//திருக்குறள் சௌராஷ்டிர மொழியில் தமிழ் இலக்கண முறையில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. \\

இராகவன், தமிழ் வேதத்தை தமிழ் முறைபடி மொழி பெயர்த்தவர் திரு S.S.ராம்.

//நல்ல செயல். அதற்கு நீங்களும் உதவியிருக்கின்றீர்கள் என்றால் பெருமகிழ்ச்சி. //

அதை கணிணியில் கொண்டு வர உதவினேன்.

நன்றி.