Friday, July 10, 2015

ஸௌராஷ்ட்ரர் # 4

ஸௌராஷ்ட்ரா தேசம்
சௌராஷ்ட்ரா தேசம் இதிகாச புராணங்களில் கூறப்படும் பாரத நாட்டின் 56 தேசங்களில் சௌராட்டிர தேசமும் ஒன்றாகும். . இத்தேசம், தற்போதைய குசராத்து மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகள், வடக்கே கட்சு வளைகுடாவும், தெற்கே காம்பே வளைகுடாவும், மேற்கே அரபியன் கடலும், கிழக்கே தற்போதைய குசராத்து மாநிலத்தின் இதர பகுதிகளால் சூழப்பட்டது. சௌராஷ்ட்ரதேசத்தின் நிலப்பரப்பு முக்கடல்களால் சூழப்பட்டதால் இதனை கத்தியவார் தீபகற்பம், என்பர்.
சௌராஷ்டிர தேச நிலப்பரப்பில் தற்போது இன்றைய குசராத்து மாநிலத்தின், ராஜ்கோட் மாவட்டம், போர்பந்தர் மாவட்டம், ஜாம்நகர் மாவட்டம், ஜூனாகாத் மாவட்டம், அம்ரேலி மாவட்டம், பவநகர் மாவட்டம், சுரேந்திரநகர் மாவட்டம், தேவபூமிதுவாரகை மாவட்டம் மற்றும் கிர்சோம்நாத் மாவட்டம் ஆகிய ஒன்பது மாவட்டங்கள் அடங்கியுள்ளது.
இச் சௌராட்டிர தேசத்தில் தான் 12 ஜோதிர் லிங்கங்களில் முதன்மையான சோமநாதபுரம் ஆலயம் மற்றும் துவாரகை கோயிலும், கிர்னார் சமணர் கோயில்களும், கிர் தேசியப் பூங்காவும் அமைந்துள்ளது.
பண்டைய சௌராஷ்ட்ரதேசத்தின் நிலவியல் அமைப்பு :
பண்டைய காலத்தில் சௌராஷ்ட்ர நிலப்பரப்பு, ஆனர்ந்தா, லாட்டா (லாடதேசம்), சௌராஷ்ட்ர தேசம் என முப்பெரும் பிரிவுகளாக பிரிந்து இருந்தது. இக்கால வடக்கு குசராத்தின் பகுதி ’ஆனர்ந்தா’வாக இருந்தது. அதன் தலைநகர் இக்கால ஆனந்தபூர் எனபடும் ’ஆனந்த்’ (Anand). இக்காலத் தெற்கு குசராத்தில் மகீ ஆற்றுக்கும், தப்தி ஆற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு, முன்பு லாட்டா (லாடதேசம்) பகுதியாக விளங்கியது. இக்கால கத்தியவார் தீபகற்ப பகுதி சௌராட்டிர தேசம் எனப்பட்டது. இப்பெயர் இப்பகுதி மக்களால் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் சௌராஷ்ட்ரதேசம் :
இதிகாச, புராணங்களில் கூறப்படும் 56 நாடுகளில் சௌராஷ்ட்டிரதேசமும் ஒன்று. அதர்வண வேதத்தில், சௌராஷ்ட்ர தேசம் பற்றிய குறிப்பில், லலிதா திருபுரசுந்தரியின் அம்சமான ’பகளாமுகி’ என்ற சக்தி தேவி சௌராஷ்ட்ர தேசத்தில், மஞ்சள் நிற நீரோடையில் தோண்றினாள் என்றும், பகளாமுகி தேவிக்கு ’பீதாம்பரீ’ என்ற பெயரும் உள்ளதாகவும் அறியப்படுகிறது.
’வஸ்திராபத க்ஷேத்ர மகாத்மியம்’ எனும் பண்டைய கால புரான நூலில் பிரபாச காண்டத்தில் கூறப்பட்டுள்ள செய்தி: மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி, கயிலை மலையில் தவம் செய்து வந்த 64 ரிசிகளை, தாமேதரன் என்பவரின் தலைமையில் சௌராஷ்ட்ர தேசத்தில் உள்ள ரைவத மலைப்பகுதிக்கு (Girnar Hills) அழைத்து வந்தார். அங்கிருந்த தாமோதர சுவாமி கோயிலுக்குள் அவர்கள் நுழைந்தவுடன், அவர்களை அழைத்து வந்த தாமோதரன் மறைந்து விட்டாராம். அசரீயாக ஸ்ரீகிரிநாராயணர் (விஷ்ணு) அவர்களை, இந்த கிரிநாராயணர் கோயில் பகுதியில் தங்கி வாழும்படி கூறி, அவர்களுக்கு கிரிநாராயணர் வேதியர்கள் என்ற பெயர் சூட்டி ஆசிர்வதித்தார். அந்த பகுதியை ஆண்ட சந்திரகேது என்ற அரசன் அவர்களுக்கு 64 கன்னிகைகளை கன்னிகாதானம் செய்து கொடுத்து 64 கிராமங்களும் மற்றும் பொன், பொருட்கள் தானமாக வழங்கினார். இவர்கள் தங்களுக்குள் 64 கோத்திரங்களாக பிரிந்து வாழ்ந்தனர். சௌராட்டிரா தேசத்து வேதியர்கள், வேதகாலத்து 64 ரிஷி கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள்.
தசரதன் சௌராஷ்ட்ர தேசத்திற்கு வந்து, வேதியர்களுக்கு பாதுகாப்பும் கௌரவமும் செய்தார் என்று இராமாயணம் மூலம் தெரியவருகிறது. மேலும் மகாவிஷ்ணு, வாமன வடிவத்தில் சோமநாதபுரம் (குசராத்து) அருகில் ஒரு நகரை உண்டாக்கி, அதற்கு வாமன ஸ்தலம் என்று பெயரிட்டார். தைத்தியர்கள் (அசுரர்கள்) அந்நகரை கைப்பற்றிய பொழுது, தசரத மாமன்னர் வாமன தலத்தை மீட்டு, அங்கு வாழ்ந்த கிரிநாராயண சௌராஷ்ட்ர வேதியர்களுக்குக் கொடுத்தார். தசரத மாமன்னர் மீண்டும் சௌராஷ்ட்ர தேசத்திற்கு வந்து சௌராஷ்ட்ர தேச வேதியர்களைக் கொண்டு அசுவமேத யாகம் செய்தார். அதன் பலனாக அயோத்தியில், திருமாலின் எட்டாவது அவதாரமான ஸ்ரீஇராமர் அவதரித்தார்.
திருமாலின் ஒன்பதாவது அவதாராமான ஸ்ரீகிருஷ்ணர், மதுராவை விட்டு யாதவர்களுடன் வெளியேறி, சௌராஷ்ட்ர தேசத்தில் குடியேறி துவாரகை எனும் துவாரகபுரி கடற்கரை நகரை அமைத்து ஆட்சி புரிந்தார் என்பதையும், கண்ணபிரான் சோமநாதரை வழிபட்டு புருஷோத்தமன் என்ற உயர் பதவி அடைந்தார் என்றும், யது குலத்தவர்கள் முனிவரின் சாபத்தால் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு, யது குலம் அழிந்த பிறகு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சோமநாதபுரம் (குசராத்து) ஆலயம் அமைந்த பிரபாச பட்டினத்தில் இருந்து வைகுண்டம் எழுந்தருளினார் என்பதை பாகவத புராணம் மற்றும் மகாபாரதம் மூலம் அறியலாம். மேலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் துவாரகையில், உத்தவர் என்ற தன் பக்தருக்கு உத்தவ கீதை உபதேசித்து அருளினார் என்பதை பாகவத புராணம் வாயிலாக அறியலாம்.
சௌராஷ்ட்ரதேசம் பஞ்சரத்தினங்களுக்குப் புகழ் பெற்றது என்கிறது ஒரு சமசுகிருத சுலோகம். “சௌராஷ்ட்ரே பஞ்சரத்நானி நதி நாரி துரங்க மா: சதுர்த்த ஸோமநாதஷ்ச பஞ்சமம் ஹரிதர்ஷணம்”. இதன் பொருள் சௌராஷ்ட்ரதேசத்தில் நதிகள், மாதர்கள், குதிரைகள், சோமநாதர், துவாரகை கண்ணன் ஆகியவற்றை பஞ்ச ரத்தினங்கள் (ஐந்து சிறப்பம்சங்கள்) என்று குறிப்பிடுகிறது.
சௌராஷ்ட்ரதேசத்தில் உள்ள துவாரகையில் “ராஸ நிருத்தியம்” என்ற நாட்டியம் கண்ணபிரானால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நாட்டியத்தை கண்ணனின் பேரனின் மனைவியான உஷாதேவிக்கு கற்பிக்கப்பட்டது. இவள் மூலமாக சௌராஷ்ட்ர தேச பெண்மணிகள் (ஒன்றாகக் கூடி ஆடும்) ராச நாட்டியத்தை கற்றுப் பரம்பரையாக இன்றும் ஆடி வருகின்றனர்.
சௌராஷ்ட்ரதேசம் இந்து, சமணம் மற்றும் பௌத்தம் சமயங்களை ஆதரித்து வந்துள்ளது. இங்கு இந்துக்களுக்கு அடுத்து அதிக அளவில் சமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். சமணர்களும், சமணக் கோயில்களும் இங்கு தான் அதிகமாக உள்ளது.
சந்திரனால் சிவலிங்கம் நிறுவப்பட்ட சோமநாதபுர ஆலயத்தைச் சுற்றி உள்ள கோட்டைக்கு வெளியே உள்ள மயான பூமிகளில் சைவ சமய கபாலிகர்கள் சுதந்திரமாக சுற்றி திருந்தார்கள். கோட்டைக்கு உட்புறம் இருந்த திருபுரசுந்தரி ஆலயத்தில் சைவ சமய சாக்தர்கள் வழிபட்டனர்.
சௌராஷ்ட்ரதேசத்தில் உள்ள போர்பந்தர் எனும் நகரம் முன்பு சுதாமபுரி என்று அழைக்கப்பட்டது. சுதாமர், ஸ்ரீகிருஷ்ணரின் பள்ளி பருவத்து ஆருயிர் நண்பர். அவருடைய பெயரால் அமைந்த ஊர் சுதாமபுரி.
விசிஷ்டாத்துவைத சமய ஆச்சாரியரான இராமானுசர் மற்றும் துவைத சமய ஆச்சாரியரான மத்வர் ஆகியவர்கள், துவாரகை ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டனர். துவாரகை கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று. மகாராஷ்ட்ர மகான் ஞனேஸ்வரரும் துவாரகை இராஜகோபாலனை வழிபட்டார். கண்ணனின் காதலியான மீராபாய் மார்வாரிலிருந்து, கண்ணனை காண துவாரகை வந்து கண்ணனுடன் கலந்தார்.
பண்டைய வரலாற்றில் சௌராஷ்டிர தேசம் :
கிரேக்கர்கள் மற்றும் உரோமானியர்கள் முதலிய வெளிநாட்டினர், இங்குள்ள வரலாற்று புகழ் மிக்க துறைமுகப்பட்டினங்கள் மூலம் வணிகம் செய்தனர். கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் சௌராஷ்ட்ர தேசத்தை வெற்றி கொண்ட ’மேனாண்ட்ரின்’ செயலைப் புகழும் ’ஸ்ட்ராபோ” என்பவர், இத்தேசத்தை “சரோஸ்டோஸ்’ என்று குறிப்பிடுகிறார்.
சோமநாதபுரம் சிவாலயத்தை நேரில் கண்ட அரேபிய வரலாற்று அறிஞர் அல்பிருணி (Albiruni) என்பவர், உலகப் புகழ்பெற்ற சோமநாதபுர சிவலிங்கத்திற்கு 750 மைல் தொலைவிலிருந்து கொண்டு வரப்படும் புனித கங்கை நீரால் நாள்தோறும் அபிஷேகம் செய்யப்பட்ட்தாக தன் வரலாற்றுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய, சந்திர கிரகணங்களின் முடிவின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சோமநாதபுரத்திற்கு இரண்டு மைல் தூரத்தில் உள்ள சரசுவதி ஆறு, ஹிரண்ய நதி மற்றும் கபில நதிகள் ஒன்று கூடும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடி சோமநாதரை வணங்கினர் என்றும், இக்கோயிலின் வருமானமும், செல்வமும் குவிந்த காணிக்கைகளும் கணக்கிட முடியாதது என்று, இசுலாமிய வரலாற்று அறிஞர் இபின் அசிர் வியக்கிறார்.
’பிரபாஸ சேத்திரம்’ , ‘ பிரபாஸ பட்டணம், ’தேவ பட்டணம்’ , மற்றும் ‘பட்டணம்’ என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இவ்விடத்தில் அமைந்துள்ள சோமநாதர் ஆலயம் எனும் சிவலிங்க கோயிலில் 2000 சௌராஷ்ட்ர தேச வேதியர்கள் வேதம் ஓதிக்கொண்டே இருந்தனர். இசையில் சிறந்த 300 கலைஞர்களும், 500 நாட்டியப் பெண்களும் (Daughters of Royal Houses of India) சிவபெருமானை எப்போதும் ஆடல் பாடல்களால் மகிழ்வூட்டினர். இக்கோயிலுக்கு 10,000 கிராமங்கள் மானியமாக பக்தர்கள் வழங்கி இருந்தனர். 300 முடிதிருத்தும் கலைஞர்கள் பணியில் அமர்த்தப் பட்டிருந்தனர். இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை சிற்ப கலைஞர்கள் எவ்வித ஆதாரம் இன்றி அந்தரத்தில் அமைந்தபடி நிர்மாணித்திருந்தார்கள்.
ஆதிசங்கரர், பாரத தேசத்தின் மேற்கு பகுதியில்துவாரகை ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டு ’துவாரகா மடம்’ என்ற அத்வைத மடத்தை நிறுவினார்.
சௌராஷ்ட்ரதேசத்தின் கட்ச் பகுதியில் 100 குடும்பங்கள் கொண்ட ‘பன்னி’ (Banni) என்ற கிராமம் உள்ளது. இது இந்தியாவின் எல்லையோர கிராமம் ஆகும். கால்நடைகள் வளர்த்தல், நெசவு நெய்தல், புடவைகளுக்கு பூ வேலைப்பாடுகள் செய்தல், புட்டா போடுதல் பன்னி கிராம மக்களின் தொழில். இவர்கள் சமயத்தால் இசுலாமியர் எனினும், புலால் உண்பது, மது அருந்துவது பாவம் என நினைப்பவர்கள். இவர்கள் மதம் மாறினாலும் தங்களின் பரம்பரை இந்து சமய உணவுப் பழக்க வழக்கங்களை இன்றும் பின்பற்றி வருகின்றனர்
சௌராட்டிரதேசத்திய மொழிகள் :
சௌராஷ்ட்ர தேசத்தை இசுலாமியர்கள் கைப்பற்றுவதற்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் மற்றும் சமணர்கள் சமசுகிருத மொழியின் பேச்சு மொழியான பிராகிருதமொழியின் கிளை மொழிகளான ‘சூரசேனி’ என்ற ’சௌரசேனி’ மொழியும், பெளத்தசமயத்தினர் பாலி மொழியையும் பேசினார்கள்.
இப்பகுதியை ஆண்ட இசுலாமிய மன்னர்கள் பேசிய பாரசீக மொழி, அரபு மொழி மற்றும் ஆப்கானிய மொழிகளின் தாக்கத்தின் காரணமாக , புதிதாக உருவான இந்தி மற்றும்உருது மொழி கலப்பு கொண்ட புதிய குசராத்தி மொழியை தற்போது இப்பகுதி மக்கள் பேசுகின்றனர்.
சௌராஷ்ட்ரதேசத்தை ஆண்ட மன்னர்கள் :
சௌராட்டிர தேசத்தை, மகத நாட்டு, நந்த குல, மெளரிய குல, குப்த குல, சுங்க குல, சக குல மன்னர்கள், யாதவ குல, கூர்சர பிரதிகர குல, மைத்திரக குல, சாளுக்கிய சோலாங்கி அரச குலம் மற்றும் வகேலா குல மன்னர்கள், தில்லி சுல்தான்களும், மொகலாயர்களும், இராச புத்திர வம்சத்தார்களும், சாளுக்கிய மன்னர்கள், சாதவாகனர்கள் மற்றும் மராத்திய மன்னர்களும் ஆண்டனர்.
கி.மு. 322ல் சந்திரகுப்த மௌரியர் ஆட்சியின் கீழ் சௌராஷ்ட்ர தேசம் மேற்கிந்தியப் பகுதியில் அடங்கி இருந்த்து. பேரரசர் சந்திரகுப்த மௌரியரின் மைத்துனரான புஷ்யமித்ர சுங்கன் சௌராஷ்ட்ர தேசத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். கி.மு. 155 வரை சுங்க வம்சம் சௌராஷ்ட்ர தேசத்தை ஆண்டனர்.
பின்னர் ‘ மேனாண்டர் ‘ (Medander) என்ற அன்னியர்கள் சௌராஷ்ட்ர தேசத்தை கைப்பற்றி சில காலம் ஆண்டனர்.
கி.மு. 72ல் சக வமிசத்தவர்கள் சௌராஷ்ட்ர தேசத்தை வென்று, சக அரச பரம்பரையை தோற்றுவித்தனர். இந்நாட்டை புமகன் முதல் சுவாமி ருத்ர சிங்கன் ஈறாக 26 சக வம்ச அரசர்கள் ஆண்டனர்.
பாரசீகர்கள் கி.பி.35 முதல் 405 வரை சௌராஷ்ட்டிர தேசத்தின் ஒரு பகுதியை ஆண்டனர்.
கி.பி. 126ல் ஆந்திரா நாட்டு நபான அரசன் சௌராஷ்ட்ரா தேசத்தை கைப்பற்றி ஆண்டனர்.
கி.பி. 145ல் ருத்ரதாமன் என்ற சௌராஷ்ட்ர தேசத்து மன்னன், ஆந்திர அரசனை வென்று, கி.பி. 390 வரை சௌராஷ்ட்ர தேசத்தை சுதந்திரமாக ஆண்டான்.
மகத நாட்டு மாமன்னர் இரண்டாவது சந்திர குப்த மௌரியர் என்ற (விக்கிரமாதித்தன்), சௌராஷ்ட்ர தேசத்தை வென்று, தனது மகனான குமார குப்தரை சௌராஷ்ட்ர தேசத்தின் ஆளுனராக நியமித்தார்.
கி.பி. 413ல் ’குமார குப்தர்’ மகத நாட்டின் அரியணை ஏறி சௌராஷ்ட்ர தேசத்தை ஆண்டார். அவரது மறைவுக்குப் பின் ’ஸ்கந்த குப்தர்’ ஆட்சிக்காலத்தில், ’பர்ணதத்தன்’ என்பவர் சௌராஷ்ட்ர தேசத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின் ’சக்ரபலிதன்’ சௌராஷ்ட்ரத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார்.
கி.பி. 470க்குப்பின் ’மைத்ரக’ குடியைச் சேர்ந்த (Maitraka Clan) ’பட்டாரகன்’ என்னும் படைத்தலைவர் சௌராஷ்ட்ர நாட்டை வென்று, பட்டாரகன் முதல் சிலாதித்யன் முடிய இருபது அரசர்கள், 300 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இந்த அரச வம்சத்தை வல்லபிபுரம் வம்சம் என்பர். கி.பி. 766 வரை நீடித்த வலபீபுர வம்சம் முகமதியர்களின் படையெடுப்பால் அழிந்தது. சீன பௌத்த துறவியான யுவான் சுவாங் என்பவர், வலபீபுரத்தை பற்றி, நாலந்த பல்கலைக் கழகத்திற்கு நிகரான ’வலபீபுரம்’ திகழ்ந்தாக தமது குறிப்புகளில் குறித்துளார்.
கி.பி. முதல் நூற்றாண்டு முதல் சௌராஷ்ட்ர தேசத்தை மாளவ மற்றும் மராட்டிய ’சோலங்கி’, கொய்க்வாட்’ மற்றும் போன்சுலே அரசப்பரம்பரையினர், தில்லி சுல்தான்கள் சௌராஷ்ட்ரத்தின் மீது படையெடுத்து கைப்பற்றும் வரை ஆண்டனர்.
வெள்ளையர்கள் இந்தியாவை முழுமையாக கைப்பற்றும் வரை, சௌராஷ்ட்ர தேசம், டெல்லி சுல்தான்களின் ஆட்சியிலும், பின்னர் மொகலாயர்கள்ஆட்சிக்குட்பட்டும் இருந்தது.
ஆங்கிலேயர்கள் காலத்தில், ஆங்கிலேய அரசுக்கு கப்பம் கட்டும் 122 இந்து, இசுலாமிய பெருநில மன்னர்களும், குறுநிலமன்னர்களும் மற்றும் ஜமீந்தார்களும் பெரும்பாலான சௌராஷ்ட்டிர தேசத்தின் பகுதிகளை, சமஸ்தானங்கள் என்ற பெயரில் ஆண்டனர். அவைகளில் குறிப்பிடத்தக்க சமஸ்தானங்கள், பரோடா, ஜினாகாட், பவநகர், போர்பந்தர், ராஜ்கோட், ஜாம்நகர், கட்ச், காம்பே, சோட்டா உதய்பூர், மோர்வி, நவநகர், பாலன்பூர் ஆகும்.
சௌராட்டிரதேசத்தைப் பற்றிய வெளிநாட்டு அறிஞர்களின் கூற்று :
மார்கோ போலோ என்ற இத்தாலிய வணிகர், சௌராஷ்ட்டிர பகுதியில் வணிகம் செய்கையில், அப்பகுதியில் இருந்த இந்து யோகிகள் 100 முதல் 125 வயது வரை உயிர் வாழ்ந்தார்கள் என்று தனது பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கசினி முகமது உடன் இந்தியா வந்த அரபு வரலாற்று ஆசிரியரும் கவியுமான ’அல்பரூணி’ என்பவரும், பாரசீக அறிஞரான இபின் அசிர் என்பவரும், சௌராஷ்ட்டிர தேசத்தில் உள்ள சோமநாதபுரம் (குசராத்து) கோயிலைப் பற்றியும், அதன் செல்வச் சிறப்புகள் பற்றியும் குறித்துள்ளார்.
யுவான் சுவாங் என்ற சீன பெளத்த துறவி சௌராஷ்ட்டிர தேசத்தில் இருந்த வலபீபுர கல்விச்சாலையை நாலந்தா பல்கலைக்கழகத்திற்குநிகராக உள்ளது என்று தமது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சௌராட்டிரதேசத்தை ஆண்ட மன்னர்கள் சிலர், வலிமையான ஆட்களை ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்து வந்து தங்கள் மெய்க்காவல் படையில் சேர்த்தார்கள். ஆப்பிரிக்கர்களின் குடியிருப்புகள் சௌராஷ்ட்ர தேசத்தில் பார்த்தாக வரலாற்று அறிஞர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய விடுதலைக்குப் பின் சௌராஷ்ட்ர தேசம் :
ஜீனாகாட் சமஸ்தானத்தை ஆண்ட இசுலாமிய மன்னர், இந்திய விடுதலையின் போது, ஜீனாகாட் சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைக்க வெள்ளையரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் இப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, ஜீனாகாட் சமஸ்தானம் இந்தியாவில் இணைக்கப்பட்ட்து, ஜீனாகாட் சமசுதான மன்னர் பாகிஸ்தானில் குடும்பத்துடன் குடியேறினார். சுதந்திர இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் சர்தார் வல்லபாய் படேலின் பெருமுயற்சியால் 217 சமஸ்தானங்களைக் கொண்ட சௌராஷ்ட்ர தேசத்தை (Saurashtra Region), ‘ ஐக்கிய கத்தியவார் அரசு ’ (United State of Kathiyawar) என்ற பெயரில் 15.02.1948ல் உருவாக்கப்பட்ட்து. பின்னர் இதை பம்பாய் மாநிலத்துடன் 01.01.1956ல் இணைக்கப்பட்ட்து. 01.05..1960ல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கும் போது சௌராஷ்ட்ர தேசம் (United State of Kathiyavar) குசராத்து மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
சௌராஷ்ட்ர பகுதியில் உள்ள கோயில்கள், மடங்கள், மசூதிகள் மற்ற இடங்கள் :
ஜீனாகாட் மாவட்டத்தைப் பிரித்து 2012ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கிர் சோம்நாத் மாவட்டதில், பிரபாச பட்டினத்தின் கடற்கரை ஒட்டி அமைந்துள்ள சோமநாதபுரம் கோயில். இது 12 ஜோதிர் இலிங்க கோயில்களின் ஒன்றாகும்.
ராஜ்கோட் அருகே உள்ள சாமுண்டா தேவி கோயில்.
ஆதிசங்கரர் பாரத நாட்டின் மேற்கு திசையில், சாம வேதத்திற்காக நிறுவிய காளிகா மடம் என்ற துவாரகைமடம், ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ளது.
பவநகர் மாவட்டம், பாலிதானம் என்ற ஊரில் சத்ருஜெயம் எனும் மலையில் அமைந்துள்ள தீர்த்தாங்கரர்களின் கோயில்.
ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள, துவாரகை, கிருஷ்ணன் கோயில் , (பண்டைய கோயில் மற்றும் நகரம் கடலில் மூழ்கிவிட்டது).
ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள பேட் துவாரகை கோயில்.
ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள நாகேஷ்வரர் கோயில் மற்றும் அனுமன் கோயில்.
ஜாம்நகர் மாவட்டத்தில் சமணர்களின் 16வது தீர்த்தாங்கரான சாந்திநாத்திற்கான கோயில் மற்றும் 19வது தீர்த்தாங்கரான மல்லிநாத் கோயில்.
ஜூனாகாத் மாவட்டத்தில் உள்ள கிர்னார் மலையில் சமணர்களின் தீர்த்தாங்கரர்களின் கோயில் மற்றும் சிவன் கோயில் உள்ளது.
போர் பந்தர் அருகே வில்வேஸ்வரன் சிவன் கோயில், கீர்த்தி கோயில், சுவாமி நாராயணன் கோயில்.
ஜீனாகாட், பகாவூதின் மக்பாரா மசூதி
ஆசிய சிங்கங்களுக்கான கிர் தேசியப் பூங்கா, புதிதாக உருவாக்கப்பட்ட கிர் சோம்நாத எனும் மாவட்டத்தில் உள்ளது.
சௌராஷ்ட்டிர தேசத்தில் பார்சி மக்கள் :
பாரசீகத்தை கி.பி. 651ல் முழுவதுமாக வெற்றி கொண்ட கலிபா உமர் தலைமையிலான அரபு இசுலாமியர்கள், அங்கு வாழ்ந்த ஜோரோஸ்ட்ரீய (Zorostrianism) மதத்தை பின்பற்றும் மக்களை கட்டாய மதமாற்றம் செய்தனர். பலர் கட்டாய மதமாற்றத்திற்கு அஞ்சி, பாரசீகத்தை விட்டு வெளியேறி இந்தியாவில், சிந்து பகுதியிலும், சௌராஷ்ட்ர தேசத்தின் குசராத்து கடற்கரை பகுதிகளில் 775ல் அடைக்கலம் அடைந்தனர். இவர்களைத்தான் பார்சி மக்கள் என்பர். பின்னர் இவர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சூரத், பம்பாய் போன்ற பகுதிகளில் குடியேறி தொழில் தொடங்கினர்.
சௌராஷ்ட்ரதேசமும், தமிழ்நாட்டுச் சௌராட்டிரர்களும் :
கசினி முகமது 17வது முறையாகவும் இறுதியாகவும், சனவரித் திங்கள் முப்பதாம் நாள் 1025ம் ஆண்டு, வியாழக்கிழமை அன்று சௌராஷ்ட்ர தேசத்தையும் சோமநாதபுரம் (குசராத்து) ஆலயத்தை தரைமட்டமாக இடித்து, ஐம்பதாயிரம் பேர்களைக் கொன்று , இருபதாயிரம் பேரை அடிமைகளாக பிடித்துக் கொண்டு, சோமநாதபுரம் கோயில் செல்வங்களை கொள்ளையடித்து, சூறையாடிய பிறகு மீதமுள்ள அப்பகுதி சௌராஷ்ட்ர மக்கள், பெரும்பாலோர் வேறு நாடுகளில் குடியேறினர். பின்பு தில்லி சுல்தான்களின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி, சௌராஷ்ட்ரர்கள் தேவகிரியை ஆண்ட யாதவர்கள் அரசில் குடியேறினர். பின்பு 1294ல் அலாவுதீன் கில்சி தேவகிரியைத் தாக்கி, கைப்பற்றிய பின்பு, சௌராட்டிரர்கள், விசயநகரப் பேரரசுவின் எல்லைப் பகுதியில் இருந்த காம்பிலி (Kampili) நாட்டில் குடியேறி அறுபது ஆண்டுகள் வாழ்ந்தனர். யாதவர்களின் அரசான தேவகிரியில் 200ஆண்டு காலம் வாழ்ந்து பின்னர் 1312ல்விசயநகர பேரரசில் குடியேறி வாழ்ந்தனர். பின்னர் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில், 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சௌராட்டிரர்கள், தமிழ்நாட்டில் குடிபெயர்ந்து, தெலுங்கு அரசர்கள் ஆண்ட மதுரை போன்ற பல்வேறு பகுதிகளில் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள்.