Monday, May 29, 2006

151: நவபக்தி - தாச பக்தி

தாச பக்தி
இறைவன் சேவை ஒன்றே குறிக்கோள்.


பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.

-கடுவெளி சித்தர்

இறைவனை தன் எஜமானனாக, தெய்வமாக கொண்டு, அவன் மேல் எந்நேரமும் பக்தி கொண்டு அவன் சேவையே கடமையாக பிறப்பின் லட்சியமாக கொண்டு செய்வது இவ்வித பக்தி..

ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு.


-கடுவெளி சித்தர்

என்ற சித்தரின் மொழிக்கேற்ப்ப இறைவனுக்கோ, அவர்தம் அடியவர்க்கோ தொண்டு செய்து, இறைவனடி அடைந்தவர் ஏராளம், அத்தகைய சேவையை பலவகைகளில் செய்து உய்வடைந்தவர்கள் பலர் அதில் சிலர்.

வைகுண்டத்தில் இராமாயணமில்லை, இராமாநாம இல்லை என்ற ஒரே காரணத்தால் எப்போதும் இவ்வுலகில் இது நாள் வரை இராம சேவை செய்தும் இராம நாமாவை சொல்லியும், வரும் வானரவீரன் சிரஞ்சீவி ஆஞ்சநேயன்,

அசுரனாக பிறந்தாலும் பிராமணத்தேஜஸ் நிறைந்த விபீஷணன்,

மதுராபுரியின் முக்கிய அமைச்சர் உக்கிரசேனர்,

தரும தேவதையின் மறுபிறப்பான “விதுரர்”.

எப்போதும் ஈசனையே தியானிக்கும் நந்தி, கிங்கன-பூத கணங்கள்.

நாயன்மார்களில் தாசனுக்கு தாசன் என்று தன் வாழ்வை அற்பனித்த திருகுறிப்புதொன்ட நாயனார்,

மேலும் மாணிக்கவாசகரின் தொண்டு அளர்பரியது, சிவசங்கரன் மேல் தீராத பக்தி கொண்டு எத்தனை இறைசேவை செய்தாலும், அதனால் சிறு கர்வமும் கொள்ளாது இருந்தவர். நலிவடைந்த கோவில்களை செப்பனிட்டு குடமுழுக்கு செய்ய பல வழிவகை செய்து மனிதனாக பிறப்பெடுத்த காரணத்தை பூர்த்தி செய்தவர். மீண்டும் பிறவா நிலை எய்தவர்.

தாச பக்தி பற்றிய பல உதாரணங்கள் நினைவில் வந்தாலும், அது எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒரே பத்தியில், ஒரே ஓட்டத்தில் சொல்ல வேண்டும் என்று எண்ணி, இறைவனை சரணைடைந்த போது, அமரகவி பாரதியின் கண்ணன் பாட்டு நினைவில் வந்தது. இப்பாடலில் தாசபக்திமூலம் என்ன விதமான நன்மைகள் ஏற்படும் என்றும் சொல்கிறார்.

அதில் “அச்சமில்லை அச்சமில்லை” என்று உணார்ச்சியூட்டிய பாரதி சொல்கிறார் இறைவனை சரணடைந்த போது “துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை” என்று எதிர்மறையான எவ்வித உணர்வுகளும் ஏற்படாது, இருந்தாலும் இல்லாது போகும் என்று சொல்லாமல் சொல்கிறார் அமரகவி., இதோ அவரது பாடல்,

நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)

துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)

நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)

இதைவிட நான் என்ன பெரிதாக சொல்ல போகிறேன்.
10ல் 2வது
இனி அடுத்த பதிவு நாயகி பக்தி

2 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக

மகாகவிக்கா தெரியாது? இருந்தாலும் தனக்கு எது நல்லது மற்றும் அல்லது அதை அன்னையே செய்யட்டும் என்று விட்டுவிடுகிறார். தாச பக்திக்கு பாரதியே நம்காலத்தில் சிறந்த உதாரணம். தி.ரா.ச

சிவமுருகன் said...

//மகாகவிக்கா தெரியாது? இருந்தாலும் தனக்கு எது நல்லது மற்றும் அல்லது அதை அன்னையே செய்யட்டும் என்று விட்டுவிடுகிறார்.//

எப்போதும் அன்னை காளியை முன்னிருத்தும் பாரதி இதிலும் செய்தார்.

//தாச பக்திக்கு பாரதியே நம்காலத்தில் சிறந்த உதாரணம்.//

அவர் எல்லா பக்திக்கும் உரை எழுதி விட்டார், ஆனால் நாரத பக்திக்கு உதாரணமாக கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.