Monday, November 02, 2009

சௌராஷ்ட்ரர் - 3 - சௌரஷ்ட்ர தேசம்

சௌராஷ்ட்ர தேசம்

நூறு தேசத்தின் தலைநகராம் இந்த சௌராஷ்ட்ர தேசத்தில் எல்லோரும் ஓர் குலமாய் வாழ்கின்றனர்!

கண்ணன் புகழ் பாடியும் அவனளித்த தொழிலான நெசவு செய்தும் வருகின்றனர் சௌராஷ்ட்ர தேச மக்கள்.

நகரா காண்டத்தில் சொல்லபட்டுள்ளதாவது!

கோபத்திற்க்கு பேர் போன முனிவரான துர்வாச முனிவர் ஸௌராஷ்ட்ர தேசத்தில் வசிக்கும் ப்ராமணர்களிடத்தில் தனக்கு ஒரு கோவில் கட்டிக்கொள்ளும் பொருட்டு கொஞ்சம் இடம் அளிக்கும்படி கேட்டார். அதற்க்கு சரியான பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாயிருந்ததால் முனிவர் கோபம் கொண்டு உங்கள் வம்சம் க்ஷீனஸ்திதி அடையும் என துர்வாசனத்தை விடுத்தார்.

பிறிதொரு சமயம் மஹாவிஷ்ணுவின் அனுமதியினால், இந்திரன் பிதுர்காரியங்களாக செய்யப்படும் ஏகோதிஷ்டம் செய்து அதன் தானத்தை இந்த சௌராஷ்ட்ர ப்ராமணர்களுக்கு ஏகோதிஷ்டம் என்னும் தானத்தை கொடுக்கும் வேளையில், தாம் மறுபிறப்பற்றவர்கள் எனக்கூறி அந்த தானத்தை வாங்க மறுத்தனால் கோபம் கொண்ட இந்திரன் நீவீர் வறுமையில் இருக்க கடவீர் எனச் சபித்தார்.

இவ்வாறாக துர்வாச முனிவரால் சபிக்க பெற்றும், தேவராஜனால் கோபிக்க பெற்ற தேசமக்களை நோக்கி அங்கே பரசுராமர் வந்து சேர்ந்தார்!

தாம் க்ஷத்திரியர்களை ஸம்ஹாரஞ் செய்ததின் பிறகு சௌராஷ்ட்ர தேசத்தில் திரிகோத்திரபுரத்தில் பிதுர் சிராத்தம் செய்யவேண்டி சௌராஷ்ட்ர பிராமணர்களை அழைத்தார். அதற்க்கும் அவர்கள் தாம் கண்ணன் கையால் தொழில் பெற்றவர்கள் என்றும், தங்களது பாவம் இத்தலத்தில் பிதுர்காரியம் செய்வதால் தீரப்போவதில்லை எனக்கூறி அவரோட ஒத்து போக மறுத்தனர்!

ஜோதிடத்தில் தேர்ந்தவரன் மாறனத்துவர் என்பவர், பரசுராமரை உடனே தமது தேசத்தை விட்டு வெளியேறுமாறும், தென்கோடியில் இருக்கும் கண்ணனின் குழந்தை பருவக்கோவிலில் துலாபாரம் தந்தால் க்ஷத்திரியர்களை ஸம்ஹாரம் செய்த பாவம் தீரும் என்று கண்ணன் அருளால் திருவாய் மலர்ந்தார்.

தமக்கே பாப விமோக்ஷன மார்க்க தரிசனம் தர யாரிவர்கள் என்று கோபம் கொண்ட சிரஞ்சீவி பரசுராமர், எவ்வாறு எம்மை இத்தேசதை விட்டு வெளியேற சொன்னீர்களோ அவறே நீங்களும் தேசம் இழந்து கடவீர்கள் என சாபம் கொடுத்தார்.

இவ்வாறாக சாபம் பெற்றவர்கள், சதாரணமானவர்களா?

ஆம் கண்ணன் கையால் தொழில் பெற்றவர்கள்!

என்ன செய்தனர்?...

Friday, October 30, 2009

சௌராஷ்ட்ரர் - 2 - பரசுராமர்

பாகம் - 2


பரசுராமர்


உலகம் பல பாவங்களை சுமக்க போகிறது, அவற்றை அடக்கி ஒடுக்கி ஆளவேண்டுமெனில் அதற்கு ஒரு மாபெரும் சக்தி எங்கும் வியாபித்து இருக்க வேண்டும். அப்பேற்பட்ட சக்தியை உலகில் நிலைபெற செய்ய வேண்டுமெனில் அதற்கும் ஒருவர் வேண்டும், அதை செய்யும் துணிவும், மணப்பக்குவமும் நிறைந்து இருக்க வேண்டும். அப்பேற்பட்டவர் உருவாக எவ்வளவு காலமாகும் என்று தேவர்கள் பகவானை நோக்கி கேட்கின்றனர். அதற்கு பகவான் சொல்கிறார்! அப்பேற்பட்டவர் உருவாக கால நேரம் கூடினாலே போதும் எல்லாம் தாமாக நடக்கும் என்கிறார்.

மஹேசனே பகவான் ஜமதக்னியாகவும், அன்னை பார்வதி ஸ்ரீ ரேணுகா தேவியாகவும் பிறப்பெடுத்து ஒரு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுக்கின்றனர். இவன் அந்த சாரங்கனின் திருஅவதாரம் என்றும், தன்னுடைய ஆணையின் பேரில், இவன் தன் தாயையே சிரசேதம் செய்யகூட தயங்க மாட்டான் என்பதை தன் ஞானத்தால் உணர்ந்த பகவான் இவருக்கு ‘பரசுராமன்’ என நாமகரனம் செய்தார்.

ஏழு சிரஞ்ஜீவிகளில் (பலி, வியாஸர், ஹநுமான், விபீணஷனர், கிருபர், பரசுராமர், அச்வத்தாமா) ஒருவரான பரசுராமர், ஐயப்பனுக்காக நான்கு முக்கிய கோயில்களை உருவாக்கினார் என்று புராணங்கள் சொல்கின்றன. குழத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன் கோவில் மற்றும் சபரிமலை. இந்த நான்குமே கேரள மாநிலத்தில் அதுவும், ஒரே மலைத்தொடரில் அமைந்துள்ளது சிறப்பான ஒரு விஷயமாகும்.

மனித வாழ்க்கையை ஐந்து பருவங்களாக நம் சாஸ்திரங்கள் பிரித்துச் சொல்கின்றன. இந்த ஐந்து பருவங்களையும் விளக்கும் வகையில் ஐயப்பனின் அவதாரங்கள் இருந்திருக்கின்றன.


1. பிறந்தது முதல் பதினெட்டு வயது வரை ‘பால்ய பருவம்’. இந்தப் பருவத்தை விளக்கும் அவதாரத் தலம் - குழத்துப்புழா.


2. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயதுவரை உள்ளது ‘யெளவன (யவ்வனம்) பருவம்’. இதை விளக்கும் தலம் - ஆரியங்காவு.


3. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயது வரை ‘கிரஹஸ்த பருவம்’ - இதுதான் அச்சன்கோவில்.


4. ஐம்பத்தாறு முதல் எண்பத்தைந்து வயது வரை ‘வானப்பிரஸ்தம்’ - சபரிமலை.


5. எண்பத்தாறு வயது முதல் ‘ஏகாந்த’ நிலை - காந்தமலை.


இப்படி மனித வாழ்வோடு தொடர்புடைய நிலைகளில் ஸ்வாமி ஐயப்பன் எழுந்தருளினார்.


இவ்வாறாக பரத கண்டத்தில் பல நற்காரியங்களை செய்து வந்தவர். சௌராஷ்ட்ர தேசத்தை அடைந்து தாம் கண்ணனாக வந்து கொடுத்த தொழிலை சரியாக செய்கின்றனரா? என காணவந்தார் போலும்! ப்ரோஹிதர்களை சோதிக்க வந்தார் போலும்!


சோதனை, சாதனையானதா? வேதனையானதா!?!?!?


தொடரும்...

சௌராஷ்ட்ரர்-1 - கண்ணன் கையால் தொழில்

பாகம் - 1
கண்ணன் கையால் தொழில்

எத்தனையோ இழிபிறவிகள் எடுத்து, எத்தனையோ உருவம் எடுத்து கடைசியாக பெறுவது இந்த மனித பிறவி. இந்த பிறவி காணக்கிடைக்காதது, அடைவது என்பது பல ஜன்மங்களின் தவம் என்றே எல்லா வேதங்களும் சாஸ்த்திரங்களும் சொல்கின்றன. அப்பேற்பட்ட மனித குலத்தில் எத்தனை வித தெய்வங்கள், எத்தனை வித வழிபாடு என்று பட்டியலிட்டால், பட்டியல் நீள்கிறது. அப்பேற்பட்ட ஒரு காலகட்டம் தான், சாஸ்திர - சரித்திரகாலம். அக்காலத்தில் மூன்று தலைமுறையாக வழிபாடு நடத்தி காணக்கிடைக்காதா அந்த கண்ணனின் லீலைகளை தன் கண்முன்னால் கண்ட மாந்தர்கள், அவரிடமே சில அறிவுரைகளையும், தொழிலையும் பெற்றனர்.

கண்ணன் கர்பக மரத்திலிருந்து பஞ்சை எடுத்து அம்மக்களிடம் கொடுத்து 4 தொழில்களை தருகிறான்.

1 நெசவு.
2 ப்ரோஹிதம்.
3 கணிதம்.
4 (மக்கள் மற்றும் மஹேசன்) சேவை.

அவ்வாறு பெற்றவர்கள், தங்கள் தொழில் செய்ய நூறுதேசங்களின் தலைமை இடமான சௌராஷ்ட்ர தேசத்தில் பிறப்பெடுக்கிறார்கள். இதோ! அவர்கள் நெசவு செய்யும் ஓசையானது, அந்த கீதை சொன்ன கண்ணனை என்பதைவிட தங்களுக்கு தொழில் தந்த கண்ணன் என்றே பாடி ஆடி பரவசப்படுவது வெளிப்படுகிறது.

ப்ரோஹிதம் செய்பவர்கள் கணிதம் செய்பவர்களிடம் நிதி பெற்றனர், கணிதம் செய்பவர்கள் நெசவு மற்றும் சேவை செய்பவகளிடம் பலன் பெற்றனர். இப்படியாக இருந்த அக்குடிக்கு ஒரு பங்கம், அங்கமே போனாலும் அந்த சாரங்கன் இருக்கிறான் என்று வாழ்தவர்கள்!

தன் தங்கை திரௌபதிக்கே கொடுமைசெய்ய தூண்டிய கர்ணனை கூட தன் விஸ்வரூபம் காட்டி மோக்ஷமளித்தவன் கண்ணன். அப்பேற்பட்ட கண்ணன் கையால் தொழில் பெற்றவர்கள் என்ற பெருமையில் இருந்தவர்கள், கலியின் பிடியில் சிக்கினர்.

சிக்கியவர்கள் பல தொழில்கள் செய்ய வேண்டியதாயிற்று.கூடவே தங்கள் உடல் பாழாவதை அறிந்தனர். மேட்டுக் குடியில் இருந்த நெசவாளிகள் தமக்கு செவை செய்யும் மக்கள் மீது சற்றே நிறைய (வேலை) பளுவை தினித்தனர்! பூபாரம் தீர்க்க வந்தவன் தன் அடியவர் பாராம் தாங்குவானா? சற்றே சினந்தான்! இதோ சிக்கியவர்கள் சின்னாபின்னமானார்கள்.

யாதவர்கள் சப்தரிஷிகளுக்கு செய்த துர்நடத்தை காரணமாக குலமே நாசமானது! இதை கண்ட பிறகாவது யோசித்து நிதானித்து முடிவெடுக்க வேண்டியவர்கள்! சொல் மாறினர்! நிலை தடுமாறினர்!நிலை மாறும் உலகில் இவர்களது நிலை மாறியது!

மாறிய நிலை என்னவானது?

தொடரும்...

Thursday, April 23, 2009

கற்றதனால் ஆன...பயன்…

கற்றதனால் ஆன...பயன்…


எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்திர்கள்

கலாச்சாரத்தைக் கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிக்கைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்
எங்கள் சம்பாத்யத்தின்
பெரும் பகுதியை வரிஎனப் புடுங்கினீர்கள்
நங்கள் அந்நிய தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில் பாலங்கள் கட்டினீர்கள்
"இந்திய ஒளிர்கிறது"
என விளம்பரம் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோசம் தானா சகோதரர்களே ?
உங்கள் சட்டைகளைப் பற்றிக்
கேட்கிறோம்…
"கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?"
குறிப்பு : ஒரு க‌ணினி காத‌ல‌னின் க‌ண்ணீர்

Saturday, October 25, 2008

தீப திருநாள் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்


சொல்லிக்கொள்வது
உங்கள் அன்பு பதிவளான் (!?!)
சிவமுருகன்

Saturday, September 27, 2008

மதுரைக்கு போனேனடி - 1

கடந்த இருவருடங்களாக மதுரை சென்ற சமயம் செய்ய முடியாத ஒன்று இம்முறை முடிந்தது.

ஒவ்வொருதடவை ஒரு முறையாவது மீனாட்சி அம்மன் கோவில் திருபள்ளியெழுச்சி, மற்றும் பள்ளியறை பூஜையையும் மேலும் கூடல் அழகரின் விஸ்வரூப தரிசனத்தையும் தரிசிக்க வேண்டும் என்று எண்ணுவேன், இந்த முறை அது நடந்தேறியது.

அதிகாலை நான்கு மணிக்கே வீட்டில் ஒவ்வொருவராக எழுந்து விடுவர். காலை, மாலை 4.30-5.00 மணிவரை அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ள நகரா மண்டபத்தில் நகரா வாத்தியங்கள் வாசிப்பர்.

நாதஸ்வரம், தண்டோரா, இன்னபிற மங்கள வாத்தியங்களை இசைக்க கேட்பதை (அதுவும் வீட்டிலிருந்தே) கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்வேன்.

இந்த முறை அந்த இசையையும் கேட்க முடிந்தது.



தொடர்ந்து கோவிலுக்கு சென்று அதிகாலை திருப்பள்ளியெழுச்சி பார்த்து, முதல் தீபாராதனை தரிசித்து கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு நடையை கட்டினேன்.

கோவிலுக்கு செல்பவர்கள் காலணியனியாமல், வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்து சொல்ல வேண்டும் என்று பலர் சொல்ல கேட்டுள்ளேன். அதுவும் இந்த முறை தான் நடந்தது. செப்டம்பர் 2007 கூடல் அழகரை தரிசித்தேன், அதன் பிறகு ஏதோ தடை தாமதம் செல்ல முடியாத சூழ்நிலையானது.

இப்போது கூடல் அழகர் கோவிலில் அதிகாலை எல்லோரும் ஒரே நோக்கோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேத, வரதராஜ பெருமாள் எப்போது காட்சி கொடுப்பார் என்று காத்திருந்தனர். கோவில் பசு வந்துகொண்டிருந்தது. அடடா, இன்னும் சிறிது நேரத்தில் விஸ்வரூப தரிசனம்.

கோவில் குருக்கள் அப்பசுவிற்க்கு அலங்காரம் செய்தார், துளசி மாலை அணிவித்தார். அனைவரது தவிப்பையும் போக்கும் அந்த தாமோதரன் இதோ காட்சியளிக்கின்றார். அழகர்கோவில் தோசை மிகவும் பிரபலம் அதே போல் இக்கோவிலிலும் காலை பிரசாதமாக தரப்படும் தோசை மிகவும் பிரபலம். சஹஸ்ரநாம பாராயணம் ஆராம்பமாகிவிட்டது. இக்கோவிலில் மூன்று குழுக்கள் பாராயாணம் செய்வர். தோசை வினியோகம் நடந்தது. இப்போது 12 சுற்று சுற்றலாம் என்று ஆரம்பித்தேன்.

முதல் சுற்றில் பொற்றாமரை குளக்கரையில் ஒரு காண்ணாடி சட்டம் தெரிந்தது. என்ன அது?....

தொடரும்...

Tuesday, September 23, 2008

ஆரம்பமே இப்பதான்னு நெனைப்போம்

23 வயது இளைஞருக்கு மாரடைப்பு தினமலர் செய்தி - அன்றே சொன்னேன் செல்வன் அவர்களின் பதிவில்.

இந்தியாவை தூவிட்டதா? தூக்கி வாரிவிட்டதா?

ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டதின் முடிவிலே!

Wednesday, September 17, 2008

கண்ணீரும் சாதனையும் சோதனையும்


வாழ்வின் மிகப்பெரிய வேதனை பிறர் கண்களில் கண்ணீர், உங்களால்.
வாழ்வின் மிகப்பெரிய சாதனை பிறர் கண்களில் கண்ணீர், உங்களுக்காக.
ஒரு ஃபார்வர்ட் மெயில், மொழியாக்கம் அடியேன்!

Wednesday, August 27, 2008

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணிமூல உற்சவம் (புட்டுத்திருவிழா)

மதுரை, ஆக.27-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 8-ந் தேதி சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

ஆவணி மூல உற்சவ விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவிற்கு அடுத்து மிகப்பெரிய திருவிழா ஆவணிமூல விழாவாகும். குறிப்பாக மதுரையில் சிவபெருமானின் ஆட்சி இந்த மாதத்தில் இருந்து தான் தொடங்குகிறது. இந்த ஆவணி மூல திருவிழா இன்று (27-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் ஆவணி மூல வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

அதன்படி வருகிற ஆகஸ்ட் - 2-ந்தேதி, `கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை` கோவிலுக்குள் உள்ள குலாலர் மண்டபத்தில் நடைபெறும். 3-ந் தேதி, `நாரைக்கு முக்தி கொடுத்த லீலை` பூக்கடைத்தெருவில் உள்ள முத்துச்செட்டியார் மண்படத்திலும், 4-ந் தேதி `மாணிக்கம் விற்ற லீலை`யும், 5-ந் தேதி, `தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை`யும், 6-ந் தேதி, `உலாவாக்கோட்டை அருளிய லீலை`யும், 7-ந் தேதி `பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை`யும் நடக்கிறது.

பட்டாபிஷேகம்

8-ந் தேதி முக்கிய விழாவான பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 7-33 முதல் 7-57 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த விழாவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து.கண்ணன், சுவாமியிடம் இருந்து செங்கோலை பெற்றுக்கொண்டு அவரின் சார்பில் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் சுற்றி வந்து, மறுபடியும் சுவாமியிடம் செங்கோலை ஒப்படைக்கிறார்.

9-ந் தேதி, `நரியை பரியாக்கிய லீலை`, 10-ந் தேதி மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில், `பிட்டுக்கு மண் சுமந்த லீலை`யும் நடக்கிறது. 11-ந் தேதி, `விறகு விற்ற லீலை`யும் நடக்கிறது. 12-ந் தேதி அம்மனும், சுவாமியும் சட்டத்தேரில் ஆவணி மூலவீதியில் எழுந்தருளுகிறார்கள்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ராஜநாயகம், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன், அறங்காவலர்கள் ருக்மணி பழனிவேல்ராஜன், ராஜாராம், புகழகிரி, பாலசுப்பிரமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

செய்தி : தினத்தந்தி

அட்டவணை
செப்- 2-ந்தேதி, `கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை` கோவிலுக்குள் உள்ள குலாலர் மண்டபத்தில் நடைபெறும்.

செப் 3-ந் தேதி, `நாரைக்கு முக்தி கொடுத்த லீலை` பூக்கடைத்தெருவில் உள்ள முத்துச்செட்டியார் மண்படத்திலும்,

செப்- 4-ந் தேதி `மாணிக்கம் விற்ற லீலை`யும்,

செப் - 5-ந் தேதி, `தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை`யும்,

செப் - 6-ந் தேதி, `உலாவாக்கோட்டை அருளிய லீலை`யும்,

செப் - 7-ந் தேதி `பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை`யும் நடக்கிறது.

செப் - 8-ந் தேதி `வளையல் விற்ற லீலை` யும், முக்கிய விழாவான பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 7-33 முதல் 7-57 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த விழாவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து.கண்ணன், சுவாமியிடம் இருந்து செங்கோலை பெற்றுக்கொண்டு அவரின் சார்பில் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் சுற்றி வந்து, மறுபடியும் சுவாமியிடம் செங்கோலை ஒப்படைக்கிறார்.

செப் - 9-ந் தேதி, `நரியை பரியாக்கிய லீலை`, யும்

செப் - 10-ந் தேதி மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில், `பிட்டுக்கு மண் சுமந்த லீலை`யும் நடக்கிறது.

செப் - 11-ந் தேதி, `விறகு விற்ற லீலை`யும் நடக்கிறது.

செப் - 12-ந் தேதி அம்மனும், சுவாமியும் சட்டத்தேரில் ஆவணி மூலவீதியில் எழுந்தருளுகிறார்கள்.


Madurai flights, madurai trains, madurai education, madurai hotels, meenakshi amman temple, India, tour, travels

Tuesday, August 26, 2008

இந்தியவின் (ரா)ருசி

இன்று காலை ஒரு நன்பரின் "Taste of India" என்று மின்னஞ்சல் ஒன்று மிகவும் கவர்ந்தது. நீங்களும் காண.