Friday, October 30, 2009

சௌராஷ்ட்ரர்-1 - கண்ணன் கையால் தொழில்

பாகம் - 1
கண்ணன் கையால் தொழில்

எத்தனையோ இழிபிறவிகள் எடுத்து, எத்தனையோ உருவம் எடுத்து கடைசியாக பெறுவது இந்த மனித பிறவி. இந்த பிறவி காணக்கிடைக்காதது, அடைவது என்பது பல ஜன்மங்களின் தவம் என்றே எல்லா வேதங்களும் சாஸ்த்திரங்களும் சொல்கின்றன. அப்பேற்பட்ட மனித குலத்தில் எத்தனை வித தெய்வங்கள், எத்தனை வித வழிபாடு என்று பட்டியலிட்டால், பட்டியல் நீள்கிறது. அப்பேற்பட்ட ஒரு காலகட்டம் தான், சாஸ்திர - சரித்திரகாலம். அக்காலத்தில் மூன்று தலைமுறையாக வழிபாடு நடத்தி காணக்கிடைக்காதா அந்த கண்ணனின் லீலைகளை தன் கண்முன்னால் கண்ட மாந்தர்கள், அவரிடமே சில அறிவுரைகளையும், தொழிலையும் பெற்றனர்.

கண்ணன் கர்பக மரத்திலிருந்து பஞ்சை எடுத்து அம்மக்களிடம் கொடுத்து 4 தொழில்களை தருகிறான்.

1 நெசவு.
2 ப்ரோஹிதம்.
3 கணிதம்.
4 (மக்கள் மற்றும் மஹேசன்) சேவை.

அவ்வாறு பெற்றவர்கள், தங்கள் தொழில் செய்ய நூறுதேசங்களின் தலைமை இடமான சௌராஷ்ட்ர தேசத்தில் பிறப்பெடுக்கிறார்கள். இதோ! அவர்கள் நெசவு செய்யும் ஓசையானது, அந்த கீதை சொன்ன கண்ணனை என்பதைவிட தங்களுக்கு தொழில் தந்த கண்ணன் என்றே பாடி ஆடி பரவசப்படுவது வெளிப்படுகிறது.

ப்ரோஹிதம் செய்பவர்கள் கணிதம் செய்பவர்களிடம் நிதி பெற்றனர், கணிதம் செய்பவர்கள் நெசவு மற்றும் சேவை செய்பவகளிடம் பலன் பெற்றனர். இப்படியாக இருந்த அக்குடிக்கு ஒரு பங்கம், அங்கமே போனாலும் அந்த சாரங்கன் இருக்கிறான் என்று வாழ்தவர்கள்!

தன் தங்கை திரௌபதிக்கே கொடுமைசெய்ய தூண்டிய கர்ணனை கூட தன் விஸ்வரூபம் காட்டி மோக்ஷமளித்தவன் கண்ணன். அப்பேற்பட்ட கண்ணன் கையால் தொழில் பெற்றவர்கள் என்ற பெருமையில் இருந்தவர்கள், கலியின் பிடியில் சிக்கினர்.

சிக்கியவர்கள் பல தொழில்கள் செய்ய வேண்டியதாயிற்று.கூடவே தங்கள் உடல் பாழாவதை அறிந்தனர். மேட்டுக் குடியில் இருந்த நெசவாளிகள் தமக்கு செவை செய்யும் மக்கள் மீது சற்றே நிறைய (வேலை) பளுவை தினித்தனர்! பூபாரம் தீர்க்க வந்தவன் தன் அடியவர் பாராம் தாங்குவானா? சற்றே சினந்தான்! இதோ சிக்கியவர்கள் சின்னாபின்னமானார்கள்.

யாதவர்கள் சப்தரிஷிகளுக்கு செய்த துர்நடத்தை காரணமாக குலமே நாசமானது! இதை கண்ட பிறகாவது யோசித்து நிதானித்து முடிவெடுக்க வேண்டியவர்கள்! சொல் மாறினர்! நிலை தடுமாறினர்!நிலை மாறும் உலகில் இவர்களது நிலை மாறியது!

மாறிய நிலை என்னவானது?

தொடரும்...

8 comments:

குமரன் (Kumaran) said...

சிவமுருகன்,

நீங்கள் சௌராஷ்ட்ரர் வரலாறு எழுதப் போகிறீர்கள் என்று நினைத்தேன். பார்த்தால் புராணக் கதையிலிருந்து தொடங்குகிறீர்கள். :-)

கற்பக மரத்தில் இருந்து வேன்டியதெல்லாம் கிடைக்கும் என்று படித்திருக்கிறேன். பஞ்சும் கிடைக்கும் என்று இன்று தான் அறிந்தேன். :-)

கண்ணனுக்குக் கற்பக மரம் எப்படி கிடைத்தது? பாமாவுக்காக பாரிஜாத மரத்தை தேவலோகத்திலிருந்து கொண்டு வந்தான் என்று படித்திருக்கிறேன். ஆனால் கற்பக மரம் துவாரகையில் இருந்ததாகத் தெரியவில்லையே.

பஞ்சைக் கொடுத்து நெசவு செய்யச் சொன்னான் - சரி. ஏந்தக் காரணத்திற்காக புரோகிதமும் கணிதமும் தொழிலாகத் தந்தான்? மக்கள்/மகேசன் சேவை எல்லோருக்கும் தொழில் தானே.

கணிதம் செய்வது என்றால் என்ன? கணிதம் செய்பவர்களிடம் மட்டும் எப்படி நிதி சேர்ந்தது? புரோகிதம் செய்பவர்கள் அவர்களிடம் ஏன் நிதி பெற வேன்டும்?

நகை செய்யும் ஆசாரியாக மாறுவது கலியின் பிடியில் சிக்குவதா? ஏன் அப்படி சொல்கிறீர்கள் சிவமுருகன்?

இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும். இங்கே நீங்கள் எழுதுவது சௌராஷ்ட்ரர் வரலாறு இல்லை; சௌராஷ்ட்ர புராணம்.

நீங்கள் சொல்லியவற்றிக்குத் தகுந்த தரவுகள் தந்தால் மகிழ்வேன் – புராணத் தரவுகளைத் தவிர.

சிவமுருகன் said...

அண்ணா,

பல நல்ல கேள்வி(கனை)களை தொடுத்துள்ளீர்கள்!

அடுத்து வரும் பதிவுகளின் சுவரஸ்யம் கருதி இதற்க்கான பதிலை பதிவிலியே தருகிறேன்!

சிவமுருகன் said...

அண்ணா,
//நீங்கள் சௌராஷ்ட்ரர் வரலாறு எழுதப் போகிறீர்கள் என்று நினைத்தேன். பார்த்தால் புராணக் கதையிலிருந்து தொடங்குகிறீர்கள். :-) //

சௌராஷ்ட்ரரின் ஆரம்பமே அங்கிருந்து தான் ஆரபமாகிறது! 18 புராணங்களில் 5 புராணங்கள் சௌராஷ்ட்ரர்களை பற்றி குறிப்புள்ளது.

வாம புராணம்! - வாமனராக வரும் மகாவிஷ்ணு, மகாபலி சக்ரவர்த்தியின் யாக சாலை செல்லும் வழியில் சில சௌராஷ்ட்ர மக்களின் வீட்டில் தங்கி செல்வதாக கூறப்பட்டுள்ளது!

பரசுராமரை வர்ணிக்கும் ஏணைய 4 புராணங்களும் சௌராஷ்ட்ரர்களை சொல்லாமல் செல்வதில்லை!

சிவமுருகன் said...

//கற்பக மரத்தில் இருந்து வேன்டியதெல்லாம் கிடைக்கும் என்று படித்திருக்கிறேன். பஞ்சும் கிடைக்கும் என்று இன்று தான் அறிந்தேன். :-) //

அதுதான் (நம்) வாழ்வின் திருப்புமுனை.

சிவமுருகன் said...

//கண்ணனுக்குக் கற்பக மரம் எப்படி கிடைத்தது? பாமாவுக்காக பாரிஜாத மரத்தை தேவலோகத்திலிருந்து கொண்டு வந்தான் என்று படித்திருக்கிறேன். ஆனால் கற்பக மரம் துவாரகையில் இருந்ததாகத் தெரியவில்லையே.//

கடலில் புகுந்து பாஞ்ஜன்ய அரக்கனை வதைத்து, தன் குரு புத்திரனை மீட்ட கண்ணனுக்கு எட்டாதோ? தேவலோகத்தில் இருக்கும் கற்பகம்.

சிவமுருகன் said...

//பஞ்சைக் கொடுத்து நெசவு செய்யச் சொன்னான் - சரி. ஏந்தக் காரணத்திற்காக புரோகிதமும் கணிதமும் தொழிலாகத் தந்தான்? மக்கள்/மகேசன் சேவை எல்லோருக்கும் தொழில் தானே.

கணிதம் செய்வது என்றால் என்ன? கணிதம் செய்பவர்களிடம் மட்டும் எப்படி நிதி சேர்ந்தது? புரோகிதம் செய்பவர்கள் அவர்களிடம் ஏன் நிதி பெற வேன்டும்?//

ப்ரோஹிதர்கள் என்றால் தனியாக ப்ரோதத் தொழில் செய்வது. சாதாரணமாகவே எல்லோரும் ப்ரோஹிதம் அறிவர்! அதையே தொழிலாக செய்பவர்கள் ப்ராமணர் என்றும் பிறகு தம் குலத்தொழிலோ! சார்த்தொழிலோ செய்து பிழைப்பது ஜீவனமாக இருந்துள்ளது. எல்லா க்ஷத்திரியர்களும் குருகுல வாசத்தில் ப்ராமணராக, ப்ரோஹிதம் செய்பவராக வாழ்ந்து தான் அனைத்தையும் கற்றனர்!

இப்பிறவி எடுத்தவர்கள், சௌரதேச மக்கள் வாள், வில், வேல் ஏந்தும் அளவிற்க்கு உடல் தகுதி குறைந்தவர்கள் ஆனால் பல சூத்திர சாஸ்திர ஞானம் பெற்றவர்கள். ஆகவே ப்ரோஹிதமும் - கணிதமும் தொழிலாக தந்தான் கீதைவசனன்.

கணிதம் செய்வது என்பது கணக்கு வழக்குகளை பார்ப்பது! தற்ச்சமய கணினியும் ஒருவிதத்தில் கணிதமே! இவர்கள் க்ஷத்திரிய மன்னர்களிடமும் வாணிப மக்களிடமும் ஊழியம் செய்து நிதி பெற்றனர். இவர்கள் தமது ஆற்றலால் பல வேலைகளை தாமே சிரமேற்கொண்டு செய்து வந்தனர் ஆகவே இவர்கள் நிதிபடைத்தவராகவும் இருந்தனர்.

தனம் இருந்தால் தானம் இருக்கவேண்டும் என்ற வாக்கின்படி வரியவர்களுக்கு தானம் தந்தனர் அம்மேற்குடி மக்கள்.

சிவமுருகன் said...

//நகை செய்யும் ஆசாரியாக மாறுவது கலியின் பிடியில் சிக்குவதா?//

கலிகாலத்தில் எல்லாம் மாறும்! இக்குலத்தவர்கள் இலகுவான உடல் தகுதி படைத்தவர்கள்! நகைஆசாரி வேலை செய்பவர்கள் குளிர்ச்சியான உணவுபழக்கங்களை கையாளவேண்டும் அத்தகைய பழக்கம் இம்மக்களுக்கு தகாது என்று தான் கண்ணன் ப்ரோஹிதம்,கணிதம் போன்ற பணிகளை தந்தார்.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன்,

இவை சௌராஷ்ட்ரர் பற்றி புராணங்களில் வரும் குறிப்புகள் என்றே சொல்லியிருக்கலாம். நான் வரலாற்றைத் தான் நீங்கள் எழுதப் போகிறீர்கள் என்று நினைத்ததால் புராணக் குறிப்புகளிலிருந்து தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

புராணக் குறிப்புகளில் வரலாற்றுக் குறிப்புகளும் இருக்கலாம். ஆனால் நன்கு ஆராய்ந்து மற்ற வகைகளில் நிறுவும் வரை புராணக் குறிப்புகளை முழுக்க முழுக்க வரலாற்றுக் குறிப்புகளாக எண்ண இயலாது.

அதைச் செய்த கண்ணனால் இதைச் செய்ய இயலாதா என்ற கேள்வியே பதில் கேள்விகளாகக் கேட்டு பேச்சுகள் சுழற்சியில் செல்லுமே ஒழிய எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் படியான வரலாற்றுக் குறிப்புகளாக புராணக் குறிப்புகள் பொதுவாக அமைவதில்லை.

வாமனராக வரும் பெருமாள் சௌராஷ்ட்ரர்கள் வீட்டில் தங்கிச் சென்றதாக உள்ள தகவலும் பரசுராமரைப் பற்றிய புராணங்கள் சௌராஷ்ட்ரர்களைப் பற்றி கூறும் தகவல்களும் இந்த வகையைச் சேர்ந்தவைகளே. பெரும்பாலும் நம்பிக்கையைச் சார்ந்தவை.

தொழில்களும் உடல் வலிமையும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. உடல் வலிமை இல்லாததால் இந்தத் தொழில்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டனவா இத்தொழில்கள் செய்யத்தொடங்கியதால் உடல் வலிமை இன்றிப் போனதா என்று சொல்ல இயலாது. கோழியும் முட்டையும் போன்றது அந்தத் தொடர்பு.

மேற்குடி மக்கள், பிராம்மண க்ஷத்திரியர் என்றெல்லாம் பேச முற்படுவது சாதிப்பெருமையைப் பேசுவது போல் இருக்கிறது. வேண்டாம் இந்தச் சாதிப்பெருமை. அனைவருக்கும் தீங்கினைத் தரும் அது.

கலியின் பிடியில் சிக்குவது என்றால் தங்கள் நிலையிலிருந்து தாழ்ந்துப் போவது என்று பொருள் தரும். அதனைச் சொல்லிவிட்டு உடனேயே நகை ஆசாரியாக மாறினர் என்று சொல்வது என்னவோ ஆசாரியாக இருப்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்று சொல்வதைப் போல் இருக்கிறது. இனி மேலாவது இப்படி தொனிக்கும் வார்த்தைகளைச் சொல்லாமல் இருக்க வேண்டுகிறேன்.

விரைவில் புராணக் குறிப்புகளைச் சொல்லி முடித்துவிட்டு வரலாற்றுப் பகுதிக்கு வருவீர்கள் என்று நம்புகிறேன்.